RSS

அம்மாவாகும் பெண்களுக்கு

அம்மாவாகும் பெண்களுக்கு; அன்பான வழிகாட்டி!
அம்மா! எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது.
கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும். இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.
பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை!
தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே!
ஆனாலும், இந்தப் பெருமையை அனுபவிக்கவிடாமல் பெண்களை பயமுறுத்துவதற்கென்றே ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன.
இவற்றைக் கேட்டு தாய்மை என்பதையே திகிலான அனுபவமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள்.
தாய்மை ரொம்ப சுலபமான விஷயமில்லைதான்.
கருவில் உதித்த சிசுவை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, உடலளவிலும் உள்ளத்து அளவிலும் பல மாற்றங்களை சந்தித்து, அதைப் பிரசவிக்கும்வரை அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் ஏராளம்தான்.
சொல்லப்போனால், பிரசவம் என்பதே ஒரு பெண்ணுக்கு மறுஜென்மம் போன்றதுதான்.
ஆனாலும், தாய்மைப்பேறு என்பது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை.
ஒவ்வொரு பெண்ணும் அனுபவித்து மகிழவேண்டிய அற்புதமான விஷயம்!
பத்து மாதங்கள் பட்ட கஷ்டமெல்லாம் பிரசவித்த நொடியில், தனது குலக்கொடியை பார்த்தமாத்திரத்தில் பஞ்சாகப் பறந்துவிடுமே!
கருத்தரித்த நாளில் இருந்து, பிரசவிக்கும் நாள் வரை இளம்தாய்களுக்கு தோன்றும் சந்தேகங்கள் ஏராளம்.
அம்மாவிடம், மாமியாரிடம், அண்டை அயலாரிடம் கேட்டுத் தெளிவுபெற்றாலும், விடை சிக்காத எத்தனையோ கேள்விகள் அவர்களின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும்.
அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் முழுமையான விளக்கங்கள் தருவதும், தாய்மைப் பேறு பற்றிய கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும்தான் இந்த இணைப்பின் நோக்கம்.
உங்கள் சார்பாக நாங்கள் கேள்விகளை தொடுக்க, பத்து மாத பராமரிப்பு பற்றி விளக்கங்களும் டிப்ஸ்களும் தந்தார்கள் மகப்பேறு மருத்துவத்தில் மிக நீண்டகால அனுபவம் பெற்ற டாக்டர் ஞானசெளந்தரி மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் ஆகியோர்.
வாருங்கள்.. தாய்மைப்பேறின் மகத்துவத்தை அறிவோம்!
கருத்தரித்திருப்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது?
மாதவிலக்கு தள்ளிப் போவது கர்ப்பத்துக்கான முதல் அறிகுறி.
பிறகு, மருத்துவரை அணுகி சிறுநீர்ப் பரிசோதனை மூலம் அது கர்ப்பம்தானா என்பதை உறுதிசெய்துகொள்ளலாம்.
முன்புபோல 40, 45 நாட்களெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, விலக்காக வேண்டிய நாளிலிருந்து இரண்டாவது நாளே சிறுநீர்ப் பரிசோதனை மூலம் கர்ப்பமா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு மருத்துவம் இப்போது முன்னேறியுள்ளது.
எந்த வயதில் கருத்தரித்தால் தாய்க்கும் சேய்க்கும் நலம்?
இருபத்தோரு வயதிலிருந்து முப்பத்தைந்து வயதுவரைதான் கருவுறுதலுக்கான சரியான காலகட்டம்.
அப்போதுதான் கருப்பை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்கும்.
கருவுறுதலுக்குக் கைகொடுக்கும் வகையில், மாதாமாதம் ஆரோக்கியமான சினைமுட்டை சீறிவருவதும் இந்த வயதில்தான்.
முப்பத்தைந்து வயதுக்குப் பிறகு கருத்தரித்தல் என்பது தாய்க்கும் அசெளகரியம். குழந்தையும் உடல் கோளாறுகளோடு பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
மாதவிலக்குக்குப் பிறகு எந்தெந்த நாட்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் கரு தங்கும்?
மாதவிலக்கு ஆன தினத்திலிருந்து பதினான்கு அல்லது பதினைந்தாவது நாள்தான் அந்த சுபயோகத் திருநாள்.
அப்பொழுதுதான் சினைப் பையிலிருந்து சினை முட்டை வெடித்து வெளியே வரும்.
மாதத்துக்கு ஒரு முறை வெளிவரும் இந்த சினை முட்டை ஒரே ஒரு நாள்தான் உயிரோடு இருக்கும்.
அதற்குள் தாம்பத்ய உறவு நடந்தால்தான் பெண்ணின் வஜினாவில் சேரும் உயிரணு, சினை முட்டையோடு சேர்ந்து கருவாகும்.
இதில் ஆச்சரியமான விஷயம்.. சினைமுட்டை வெடிக்கும் அந்த நாளில் பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். அதை வைத்தும் இன்றுதான் ‘அந்த’ நாள் என்பதை கண்டுபிடிக்கலாம்.
ஆணும் பெண்ணும் உடலால் இணையும் உறவுதான் கருத்தரித்தலின் முதல் நிலை. ஓ.கே. அதன்பிறகு என்ன நடக்கிறது?
உடல் உறவின்போது பெண்ணின் வஜினாவை அடையும் ஆணின் விந்துவில் கோடிக்கணக்கான உயிரணுக்கள் இருக்கும்.
அவை அனைத்தும் பெண்ணின் சினை முட்டையைத் தொட்டுவிட வேண்டும் என்று முட்டி மோதினாலும், கடைசியில் வெற்றி வாய்ப்பு ஒரே ஒரு உயிரணுவுக்குத்தான்.
உடனே, மற்ற உயிரணுக்கள் உள்ளே நுழைய முடியாதபடி சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகிவிடும்.
இப்போது வெற்றி பெற்ற உயிரணுவும், சினை முட்டையில் இருக்கும் உட்கருவும் கைகோர்க்க, பெண் கர்ப்பிணி ஆகிறாள்.
பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது எப்போது, எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
பெண்குழந்தை பெற்றாள் என்பதற்காகவே மனைவியை வெறுக்கும் கொடிய மனம்கொண்ட கணவர்களுக்கு இந்த பதில் அதிர்ச்சியைத் தரும்.
ஆமாம், குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிப்பதே கணவன்தான்.
சினைமுட்டையின் உள்ளே செல்லும் ஆணின் உயிரணுவில் உள்ள குரோமோசோம்தான் அதை தீர்மானிக்கிறது.. அதுவும்கூட உயிரணுவும் சினைமுட்டையும் சேரும் அந்த நொடியிலேயே!
கர்ப்பம் என்றதும் உடனே தலை காட்டும் மசக்கை எதனால் ஏற்படுகிறது?
புத்தம்புதிதாக ஒரு உயிரே உருவாகிறதே.. இதுபோன்ற அறிகுறிகள்கூட இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இருக்காதே!
இந்தக் காலகட்டத்தில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப் படும்வரை, வாந்தியும் மயக்கமும் ஏற்படும். இதைத்தான் மசக்கை என்கிறோம்.
கரு, கருப்பையில் தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும்.
எதையும் சாப்பிடப் பிடிக்காது. காபி, டீ, ரசம்.. என்று அதுவரை ‘கமகமக்குதே’ என்று சொல்ல வைத்த பல வாசனைகளும் இந்த சமயத்தில் வயிற்றைப் புரட்ட வைக்கும். தொட்டதற்கெல்லாம் வாந்தி வரும்.
அதற்காக வயிற்றை சும்மா காய விடக்கூடாது. அடிக்கடி ஜூஸ் வகையறாக்களை குடிக்கவேண்டும்.
வாய்க்கு என்ன பிடிக்கிறதோ அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும்.
இந்தச் சமயத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும்.
அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர்.
அதில் தவறில்லை. புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது.
டாக்டர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
‘எதற்கும் அடங்க மாட்டேன்’ என்பதுபோல ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே கொப்பளித்தால், மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்றுவதைத் தவிர வேறுவழியே இல்லை.
இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சலோ, சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவோ, ரத்தப்போக்கோ இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவேண்டும்.
இன்னொரு விஷயம்.. சாதாரண மயக்கம், வாந்திதான் மசக்கை. அடிக்கடி தலைசுற்றல் வந்தாலோ, எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் வந்தாலோ அலட்சியம் கூடாது.
கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இதுபோல நேர வாய்ப்பிருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறையபேர் உண்டு.
அதிகமாக வாந்தி எடுத்தால், குழந்தை தலை நிறைய முடியோடு பிறக்கும் என்கிறார்களே.. உண்மையா?
கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று.
வாந்தி பற்றி நினைக்காமல், குழந்தையின் முடி அழகு குறித்த கற்பனையில் தாயின் கவனம் திசைதிரும்பும் என்பதற்காக இப்படிச் சொல்கிறார்களோ என்னவோ..
ஆனால், குழந்தையின் முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.
வாந்தி, மயக்கம், தலை சுற்றல் வழக்கமானதுதான் என்றாலும், விடாமல் துரத்தும் அதிகபட்ச வாந்தி என்றால் கருவில் இருப்பது இரட்டைக் குழந்தைகளாகவும் இருக்கலாம்!
‘முத்துப்பிள்ளை கர்ப்பம்’ என்றாலும் இப்படி அதிகமாக வயிறு புரட்டும்!
முத்துப்பிள்ளை கர்ப்பமா? அப்படியென்றால்?
கருப்பையில் கரு ஒரேயொரு உருண்டையாக திரண்டிருக்காமல் குட்டிக் குட்டி உருண்டைகளாக மாறி, ஒன்றோடோன்று ஒட்டியபடி கருப்பை முழுக்க நிறைந்திருப்பதுதான் ‘முத்துப் பிள்ளை’ கர்ப்பம்.
இது குழந்தையாக உருவெடுக்க முடியாது. இதனை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து சுத்தம் செய்துவிடலாம்.
‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்களே.. அது என்ன? எதனால் ஏற்படுகிறது?
முதலில் ஒரேயொரு முழு ‘செல்’லாக இருக்கும் கரு, நாள்தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும்.
கடைசியில் கருப்பையில் போய் அது உட்காரும்போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந்திருக்கும்! ஆரோக்கியமான கர்ப்பம் இப்படியிருக்கும்.
ஆனால் சில சமயங்களில், கரு கருப்பையை நோக்கி நகராமல், ஃபெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும். இதைத் தான் ‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்கள்.
ஃபெலோப்பியன் குழாயில் நோய் தொற்று இருந்தால்தான் இப்படி ஆகும். பொதுவாக கரு தானாக நகராது. ஃபெலோப்பியன் குழாயின் தசைகள் சுருங்கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது.
நோய் தொற்று காரணமாக சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரியாது. அல்லது ஃபெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுக்கலாம்.
சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும். இப்படிப்பட்ட குழாய்களால் ‘கரு’வின் இயக்கம் நிச்சயம் தடைபடும்.
அதுமட்டுமல்ல, இதனால் உயிருக்கே ஆபத்து வரலாம். ஊசி நுழையும் அளவுள்ள மெல்லிய ஃபெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால் என்னாகும்?
முடிந்த வரை தாங்கி, முடியாத நிலை வரும்போது வெடித்துவிடும். உடனே கடுமையான வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்படும். உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டிய விஷயமிது.
கர்ப்பம் என்று உறுதியானதுமே டாக்டரிடம் அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துக்களை சந்திக்காமலே தவிர்க்கலாம்.
மசக்கைக்கு பின் வேறு ஏதாவது உடல்ரீதியாக பிரச்னை வருமா?
கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்னை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது.
நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு.
பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும்.
பழங்களில், பப்பாளியையும் அன்னாசியையும் தவிர்ப்பது நல்லது.
இந்தப் பழங்களால் கரு கலைந்துவிடும் என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும், மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைப்பது இல்லை.
15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும்.
கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும்.
கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. அதில் பால்புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.
தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம்.
பொதுவாக, எண்ணெய், அதிக மசாலா, காரம் இல்லாமல் உணவு இருப்பது நலம்.
ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது.
சிலருக்கு இந்த சமயத்தில் கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம்.
இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்னைதான். பயப்பட வேண்டாம்.
இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
ஆண் குழந்தை என்றால் சீக்கிரமே பிறந்துவிடும் என்கிறார்களே, உண்மையா?
‘பத்து மாத பந்தம்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும் கருப்பை ஒரு கருவைச் சுமப்பது, மொத்தம் ஒன்பது மாதம் ஒரு வாரம்தான் (இதுகூட கரு உருவாவதற்கு முன்பு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் கணக்குதான்).
இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று எந்த வித்தியாசமும் கிடையாது. எந்தப் பாகுபாடும் இல்லாமல் இயற்கை இரு வகையான குழந்தைகளையும் சமமான நாட்கள்தான் தாயின் வயிற்றில் இருக்கச் செய்கிறது.
‘ட்ரைமெஸ்டர்’ என்கிறார்களே.. அதைப்பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்..
பத்து மாதம் என்று பொதுவாக சொன்னாலும் கர்ப்ப காலம் மூன்று மூன்று மாதங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் ட்ரைமெஸ்டர் (Trimester) என்கிறோம்.
முதல் மூன்று மாதங்கள் வரை ‘முதல் ட்ரைமெஸ்டர்’. நான்காவது மாதத்திலிருந்து ஆறாவது மாதம் வரை இரண்டாவது ட்ரைமெஸ்டர். ஏழாவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை ‘மூன்றாவது ட்ரைமெஸ்டர்!’
முதல் ட்ரைமெஸ்டரில் மசக்கையும், அதனால் உண்டாகும் சோர்வும்தான் முக்கியமான விஷயம். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் மசக்கை நின்றுவிடும். வெகு சிலருக்குத்தான் அது மேலும் தொடரும். முதல் ட்ரைமெஸ்டரில் டாக்டரிடம் செக்கப் செய்துகொண்டால், பொய் கர்ப்பம், முத்துப்பிள்ளை கர்ப்பம் போன்றவற்றை தடுத்துவிடலாம்.
முதல் ட்ரைமெஸ்டரில் கரு, கருப்பையில் அழுத்தமாக தங்கியிருக்காது என்பதால் அதிர்வுகள் கொஞ்சம் அதிகரித்தாலும் கரு கலைந்துவிட வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்த காலகட்டத்தில் வெகுதூரம் பயணம் செய்வது என்பது கூடவே கூடாது.
சரி… இந்த ட்ரைமெஸ்டர் காலங்களில் கருவின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?
முதல் மாதத்திலேயே கருவுக்கு நரம்பு மண்டலம் உருவாகத் தொடங்கி விடும்.
நாற்பது நாட்களுக்குள் முதுகுத் தண்டு, இதயம் ஆகியவை ஓரளவு உருவாகி, கருவுக்கான ரத்த ஓட்டமும் ஆரம்பித்துவிடுகிறது.
கருவின் ரத்த ஓட்டத்தை தாயோடு இணைக்கும் ரத்தக் குழாயின் மற்றொரு பெயர்தான் தொப்புள்கொடி.
இரண்டாவது மாதத்தில் கருவின் இதயம் மெதுவாகத் துடிக்கவே துவங்கிவிடும்.
கை, கால்களும் காதுகளும் வடிவம் பெறுவது இப்போதுதான்.
மூன்றாவது மாதம், முகத்தின் அங்கங்கள் முறையாக வளர ஆரம்பிக்கும்.
இரண்டாவது ட்ரைமெஸ்டர் தொடக்கத்தில் அதாவது, நான்காவது மாதத்தில் வயிறு சற்றே மேடிடத் தொடங்கும்.
வயிற்றின் தசைகளும் தோலும், கருவின் வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி விரிவடையும்.
(பிரசவத்துக்கு பிறகு, விரிவடைந்த தோல் மறுபடியும் சுருங்கிவிடும். இப்படி எலாஸ்டிக் போல சுருங்கி விரிவதால்தான் குழந்தை பெற்றுக் கொண்ட பெண் களுக்கு அடிவயிற்றில் வரிவரியாக கோடுகள் விழுகின்றன.
கருவுற்ற நான்காம் மாதத்திலிருந்து விட்டமின் ஈ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற ஏதேனும் ஒன்றை அடிவயிறு முழுக்கத் தடவி, அரைமணி நேரம் ஊற விட்டு, பிறகு குளித்தால், வயிற்றில் வரிகள் விழாது.
சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள்தூளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து தடவினாலும் நல்ல பலன் இருக்கும்.
சில பெண்களுக்கு மார்பகம்கூட பெரிதாகி பிறகு சிறிதாகும். அதனால் மார்பகங்களிலும் இதேபோன்று வரிகள் விழலாம். அதற்கும் மேற்கூறிய ஆயில் மஸாஜ் பலனளிக்கும்)
தொல்லைகள் அற்ற கர்ப்ப காலம் என்றால் அது இரண்டாவது ட்ரைமெஸ்டர்தான்.
மசக்கை நீங்கி, நன்றாக சாப்பிட முடியும். உற்சாகமாக சுழல வைக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நன்றாக சுரப்பதால் இந்த ட்ரைமெஸ்டரில் பெண்களின் முகம் பளீரென்று புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும்!
குழந்தை ஆண், பெண் என்பதை தீர்மானிக்கும் பிரத்யேக உறுப்புகள் வளர ஆரம்பிப்பது இந்த நான்காம் மாதத்தில்தான்!
ஐந்தாவது மாதத்தில், கிட்டத்தட்ட அரை குழந்தையாகிவிட்ட கரு, அசைந்து தன்னைச் சுற்றியுள்ள பனிக்குட நீரில் சுகமாக நீச்சலடிக்க ஆரம்பிக்கும்.
ஐந்தாவது மாதத்திற்கு மேல் கருவின் அதாவது குழந்தையின் உருவ, உள் உறுப்புகள் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். புருவ முடி வளர்ச்சி முதற்கொண்டு முகம் முழுமையாக உருப்பெறும்.
ஆறாவது மாதத்தில் அந்த குழந்தைக்கு மட்டுமேயான தனித்தன்மையாக கை விரல்களில் ரேகைகள் அமையும்.
மூன்றாவது ட்ரைமெஸ்டரின் தொடக்கத்தில் அதாவது, ஏழாம் மாதத்தில் வயிறு பெருத்து விடுவதால் சுலபமாக உட்கார்ந்து எழுந்துகொள்ள முடியாது.
மூச்சு வாங்கும். படுத்து எழுவது சிரமமாகத் தோன்றும். இடுப்பு, முதுகில் அவ்வப்போது வலிப்பது போல் இருக்கும். நேரத்துக்கு சாப்பிட்டு, வாக்கிங் போய்வருவது நல்லது.
எட்டாவது மாதத்தில் லேசான அசதி இருக்கும்தான். ஆனால், கை கால் வலி, தலை சுற்றல், கண் இருட்டிக்கொண்டு வருவது மாதிரி பிரச்னைகள் இருந்தால், டாக்டரிடம் போகவேண்டும்.
ரத்தப்போக்கு இருந்தாலோ, நீர் இறங்கிக்கொண்டே இருப்பது போலிருந்தாலோ, வலி அதிகம் இருந்தாலோ உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.
மூன்றாவது ட்ரைமெஸ்டருக்கு முன்பே, அதாவது ஏழாவது மாதத்துக்கு முன்பே கருவிலிருக்கும் குழந்தை வெளியேறினால் அது ‘அபார்ஷன்’.
ஏழு மாதத்துக்குப் பிறகு, தவிர்க்க முடியாத நிலையில் வெளியேறினால் அந்தக் குழந்தையை இன்குபேட்டர் மாதிரி இயந்திரங்களில் வைத்து காப்பாற்றலாம்.
ஆனால் அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் போன்ற நுரையீரல் தொடர்பான சிக்கல்கள் வர வாய்ப்பு அதிகம்.
குழந்தை வெளியே வர ஏதுவாக ஒன்பதாவது மாதத்தில், தலைப் பாகம் கீழே இருக்கும்படி பொசிஷன் மாறுகிறது!
குழந்தையின் அசைவுகள் பற்றி?
ஐந்தாவது மாதத்திலேயே குழந்தையின் அசைவை நன்றாக உணரமுடியும்.
அப்போதிருந்து ஏழாவது மாதம் வரை பனிக்குட நீரில் விஸ்தாரமாக நீச்சலடிக்கும் குழந்தை, கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதால் பின்னாளில் இடநெருக்கடி காரணமாக சும்மா கை, கால்களை மட்டும் அசைக்கும்.
இதனால், ஐந்தாவது மாதத்தில் குழந்தை உதைத்ததற்கும் இப்போது உதைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.
சிலர் இதனை புரிந்து கொள்ளாமல், ‘குழந்தை அசைவு அவ்வளவாக இல்லை’ என்று கவலையோடு வருவார்கள்.
அதிலும் பிரசவ காலம் நெருங்க நெருங்க இந்தப் புகார்கள் அதிகரிக்கும்!
ஒன்பதாம் மாதத்தில் குழந்தையின் துடிப்பு குறைவாக இருக்கும்.
கடைசி மாதத்தில் ஒரு மணி நேரத்துக்குக் குறைந்தபட்சம் ஐந்து முறை துடித்தாலே போதும்.
அதுவும் இல்லை என்று தோன்றினால், சிறிதுநேரம் இடது புறமாக ஒருக்களித்துப் படுத்து கணக்கிட்டுப் பார்க்கலாம்.
அப்போதும் குறைவாக இருந்தால் டாக்டரிடம் செல்வது நல்லது. ஒருவேளை குழந்தையை தொப்புள் கொடி சுத்தியிருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளலாமா?
கரு உருவான முதல் மூன்று மாதங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முன்பே சொல்லியிருப்பது இதற்கும் பொருந்தும்.
கரு, கருப்பையில் சரியாகப் பொருந்தியிருக்காது என்பதால் அந்த நேரத்தில் அபார்ஷன் ஏற்பட வாய்ப்புகள் நிறைய.
செக்ஸ் வைத்துக் கொள்வ தால்கூட சில சமயங்களில் அபார்ஷன் ஆகலாம். அதனால் முதல் மூன்று மாதங்களில் அந்த உறவு வேண்டாமே.
அதேபோல், ஒன்பதாவது மாதத்திலும் தாம்பத்ய உறவைத் தவிர்த்துவிடுங்கள்.
‘இன்பெக்ஷன்’ ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதற்காகத்தான் இந்த அட்வைஸ்!
அப்படியானால் மற்ற ஐந்து மாதங்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாமா?
எந்த பிரச்னையும் இல்லாமல் நார்மலான கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் என்றால் அதிக அலட்டல் இல்லாமல் உறவு வைத்துக்கொள்ளலாம்.
கருப்பையில் கரு தங்காமல் அடிக்கடி அபார்ஷன் ஏற்படும் பெண்கள், கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள பெண்கள் ஆகியோருக்கு இது பொருந்தாது.
அப்படிப்பட்ட பெண்கள், பிரசவம் வரையிலுமே தாம்பத்ய உறவைத் தவிர்ப்பது நல்லது.
கருவைச் சுமந்திருக்கும் பெண்கள் மல்லாக்கப் படுத்தால் கருவை நஞ்சுக்கொடி சுற்றிக்கொள்ளும் என்கிறார்களே; உண்மையா? எப்படி படுக்க வேண்டும்?
மல்லாந்த நிலையில் படுக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால், அதற்காக கூறப்படும் காரணம்தான் சரியல்ல.
மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களை அழுத்தும்.
இதயத்துக்கு தேவையான ரத்தம் போய்ச் சேராமல் ‘பி.பி’ இறங்கும். அதனால் தலைசுற்றி மயக்கம் வரும்.
இடது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்க்கும், சேய்க்கும் நலம்.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா?
குழந்தைக்கு நிறம் தரும் சக்தியெல்லாம் குங்குமப் பூவிடம் இல்லை. இதுதான் உண்மை.
சிலருக்கு பாலின் வாடை பிடிக்காது. மசக்கை சமயத்தில் அது இன்னும் அதிகமாக வயிற்றைப் புரட்டும்.
அதனால்தான் மாறுதலான மணம் மற்றும் சுவைக்காக குங்குமப்பூவை பாலில் கரைத்துக் குடிக்கும் பழக்கம் வந்தது.
அதையும் குடிக்கமறுக்கும் பெண்களுக்கு என்ன செய்வது? அதனால்தான் குழந்தையின் கலர் என்ற சொக்கவைக்கும் வார்த்தையைச் சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.
குழந்தைகளின் நிறத்துக்கு காரணம் பரம்பரையாக வரும் மரபணுக்கள்தான்!
சாப்பாட்டு விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் கர்ப்பிணிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
கர்ப்பிணிகள் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டியது சாப்பாட்டு விஷயத்தில்தான். சும்மா இல்லை. இரண்டு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டுமே.
கால்சியமும் இரும்புச் சத்தும் மிகமிக அவசியம். தினமும் ஒரு வகை கீரை, பருப்பு, பால், தயிர் இவை தவறாமல் இருக்க வேண்டும்.
தினம் ஒரு ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் வராமல் இருக்கும்.
அசைவம் சாப்பிடுபவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை, சிக்கன் சூப் சாப்பிடலாம்.
மட்டன், சிக்கன், மீன் வகைகளை சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் இரவில் வேண்டாம்.
சாப்பாட்டில் மட்டுமல்ல.. குடிநீர் விஷயத்திலும் கவனம் தேவை. சுத்தமான குடிநீர் என்றாலும் ஒரு முறை நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிப்பது நல்லது. இல்லாவிட்டால் அசுத்தமான நீரால் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் வரலாம்.
சாப்பிட்டதும் படுக்கக்கூடாது. அப்படிப் படுத்தால் நெஞ்சை அடைப்பதுபோல் அவஸ்தையாக இருக்கும்.
இரண்டு பேருக்குச் சாப்பிட வேண்டுமே என்று ஊட்டமாகச் சாப்பிட்டு அதனால் உடல்எடை அதிகரித்தால்?
அதிலும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடும் அதே சமயம் முடிந்த அளவுக்கு வேலைகள் செய்தும், நடை பயிற்சியின் மூலமும் உடல் எடை அதிகரித்துவிடாதபடி பார்த்துக் 
கொள்ளலாம். 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment