Showing posts with label Moringa flower. Show all posts
Showing posts with label Moringa flower. Show all posts

சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!! - Health Tips

1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்
2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்
3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்
4. பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்
5. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.
6. மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.
7. சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.
8. பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும்.
9. கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.
நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.
அத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும்.
தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ சாப்பிடலாம் சதைப்பகுதியில் மட்டுமல்ல இதிலும் நீர்ச்சத்து உள்ளது.
ஆரோரூட் மாவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு களைப்படையும்பொழுது மட்டுமே கஞ்சி வைத்து சாப்பிட்டு குணமடைவோம். இது அனைவரும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவென்றால் அதிக கோடையில் வியர்த்து விறுவிறுத்து களைப்பாக இருக்கும்போது ஆரோரூட் மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் குளிர்ந்து வியர்க்காமல் இருக்கும்
மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சக்தி பெருகும். வாந்தியை நிறுத்தும்.
தேநீர் தயாரிக்கும்போது வெல்லம் சேர்த்து அருந்துவதே நல்லது. சர்க்கரை உடலுக்கு அவ்வளவு உகந்ததில்லை.
கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்/ அப்போதுதான் கிட்னியில் கல் உண்டாகாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கீழா நெல்லியை பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல் குடல் வீக்கம் வயிற்று மந்தம் சரியாகும்.
காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்து சாப்பிடுங்கள் கூடவே கொஞ்சம் வெந்நீர் குடியுங்கள் காலை மாலை என மூன்று நாள் இதேபோல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
பொடுகுத் தொல்லை முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் ப்லன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் ஓரிரு மாதங்களில் வித்தியாசம் தெரியும்.
வயிற்று வலியால் அவதிப்படும்போது பத்து புதினா இலைகளை வெறுமனே வதக்கி ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைக்கவும் இதை காலை மதியம் மாலை என கொடுத்து வந்தால் வயிற்று வலி மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும்.
பிரண்டையின் மேல் பகுதியில் உள்ள நாரை உரித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும் அத்துடன் காய்ந்த் மிளகாய் புளி உப்பு உளுந்து தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்
பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.
முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர். முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று. இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
கண்களைப் பாதுகாக்க
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
ஞாபக சக்தியைத் தூண்ட
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.
இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
பெண்களுக்கு
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
தாது புஷ்டிக்கு
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS